ஆரா அமுதமாய் அல்ஆவியுள் கலந்த
கார்ஆர் கருமுகில்போல் என் அம்மான் கண்ணனுக்கு
நேரா வாய் செம்பவளம், கண், பாதம், கை கமலம்,
பேர்ஆரம், நீள்முடி, நாண், பின்னும் இழைபலவே.
கருத்த மேகத்தைப்போன்ற என் அம்மான் கண்ணன், பெரிய மாலை, நீண்ட திருமுடி, அரைநாண், இன்னும் பல ஆபரணங்களை அணிந்திருக்கிறான், என்னுடைய அற்ப உயிரிலேகூட தெவிட்டாத அமுதமாகக் கலந்திருக்கிறான், அந்தக் கண்ணனின் வாயழகுக்குச் செம்பவளமும் நிகராகாது, அவனது கண், பாதம், கை போன்றவற்றின் அழகுக்குத் தாமரையும் இணையாகாது.