பாடல் - 7
மெய் அமர் பல்கலன் நன்கு அணிந்தானுக்கு,
பை அரவின் அணைப் பள்ளியினானுக்கு,
கையொடு கால் செய்ய கண்ணபிரானுக்கு என்
தையல் இழந்தது தன்னுடைச் சாயே.
திருமேனியிலே பல அணிகலன்களை நன்கு அணிந்தவன், படமெடுக்கும் பாம்பாகிய ஆதிசேஷனைப் படுக்கையாகக்கொண்டவன், கையும் காலும் சிவந்த கண்ணபிரான், அத்தகைய பெருமானை எண்ணி, என் மகள் தன்னுடைய அழகை இழந்துவிட்டாள்.
***
பாடல் - 8
சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு,
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு,
பேயைப் பிணம்பட பால் உண் பிரானுக்கு என்
வாசக் குழலி இழந்தது மாண்பே.
குருந்தமரமாக வந்த அசுரன் சாயும்படி அதனை முறித்த தனிவீரன், மாயமாக வந்த சக்கரத்தை உதைத்த மணாளன், பேயான பூதனை பிணமாகும்படி அவளிடம் பாலுண்ட பிரான், அத்தகைய பெருமானை எண்ணி, மணம்பொருந்திய கூந்தலையுடைய என் மகள் தன்னுடைய சிறப்பை இழந்துவிட்டாள்.