பாடல் - 11
கூந்தல் மலர் மங்கைக்கும் மண்மடந்தைக்கும்
குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன்தன்னை
வாய்த்த வழுதி வளநாடன் மன்னு
குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெரும்செல்வத்தராய்த் திருமால்
அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.
கூந்தலிலே மலர் சூடிய திருமகள், புவிமகள், ஆயர்குலக் கொழுந்தான நப்பின்னை ஆகியோரின் கணவனான எம்பெருமானுக்குக் குற்றேவல் செய்தார் சிறந்த, வளமுள்ள வழுதி நாட்டைச் சேர்ந்த, நிலைத்திருக்கும் திருக்குருகூர்ச் சடகோபன், அவர் அப்பெருமானின் குணங்களை ஆராய்ந்து அனுபவித்து ஆயிரம் தமிழ்ப்பாடல்களை மாலையாகப் பாடினார், இவற்றில் இந்தப் பத்து பாடல்களையும் சொல்ல வல்லவர்கள், உலகிலே எல்லாரும் போற்றும்படி மிகுந்த செல்வத்துடன் வாழ்வார்கள், திருமாலின் அடியவர்களை வணங்குவார்கள், அத்தகைய புண்ணியம் அவர்களுக்குக் கிடைக்கும்.