பாடல் 4
தொழுத்தையோம் தனிமையும், துணை பிரிந்தார்
துயரமும் நினைகிலை, கோவிந்தா, நின்
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி,
துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி,
பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம்
பாவியேன் மனம் அகம்தோறும் உள்புக்கு
அழுத்த, நின் செங்கனி வாயின் கள்வப்
பணிமொழி நினைதொறும் ஆவி வேம்ஆல்.
கோவிந்தா, அடிமைகளாகிய எங்களுடைய தனிமையையும், துணையைப் பிரிந்து வாடுகிற எங்களுடைய துயரத்தையும் நீ நினைப்பதில்லை, தொழுவத்திலுள்ள உன்னுடைய பசுக்களைதான் விரும்புகிறாய், எங்களை விட்டுவிட்டு அவற்றை மேய்க்கச் செல்கிறாய், பழுத்த நல்ல அமுதத்தின் இனிய சாறு வெள்ளமாகப் பாய்ந்து வருவதுபோல உன்னுடைய பேச்சு, அது பாவியாகிய என்னுடைய உள்ளத்தில் நுழைந்து ஒவ்வோர் இடத்திலும் அழுத்துகிறது, உன்னுடைய செங்கனிபோன்ற திருவாயிலிருந்து வரும் கள்வத்தனமான சொற்களை நினைக்கும்போதெல்லாம் என் உயிர் வேகிறது.