பாடல் 5
பணிமொழி நினைதொறும் ஆவி வேம்ஆல்,
பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா,
பிணி அவிழ் மல்லிகை வாடை தூவ,
பெரு மத மாலையும் வந்தின்றாலோ,
மணிமிகு மார்வினில் முல்லைப் போது என்
வன முலை கமழ்வித்து, உன் வாய் அமுதம் தந்து,
அணிமிகு தாமரைக் கையை அந்தோ,
அடிச்சியோம் தலைமிசை நீ அணியாய்.
பகல்முழுவதும் பசுக்கூட்டங்களை மேய்க்கச் சென்ற கண்ணா, உன்னுடைய பணிவான பேச்சுகளை எண்ணும்போதெல்லாம் என் உயிர் வேகிறது, பெரிய செருக்கோடு மாலைப்பொழுது வருகிறது, கட்டவிழ்ந்த மல்லிகை மலர்களை வாடைக்காற்று தூவுகிறது, பெருமானே, உன்னுடைய ரத்தினம் அணிந்த மார்பிலே இருந்த முல்லை மலர் என்னுடைய அழகிய மார்பகங்களை நறுமணம் கமழச்செய்யட்டும், உன்னுடைய வாய் அமுதத்தை அடியவர்களாகிய எங்களுக்குத் தருவாய், அழகிய தாமரைபோன்ற திருக்கரத்தை எங்கள் தலையிலே அணிவிப்பாய். அடடா.