பாடல் 9
உகக்கும் நல்லவரொடும் உழிதந்து உன்தன்
திருவுள்ளம் இடர் கெடும்தொறும் நாங்கள்
வியக்க இன்புறுதும், எம் பெண்மை ஆற்றோம்,
எம்பெருமான், பசு மேய்க்கப் போகேல்,
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு
நின்று உழிதருவர் கஞ்சன் ஏவ,
அகப்படில் அவரொடும் நின்னொடு ஆங்கே
அவத்தங்கள் விளையும், என் சொற் கொள், அந்தோ.
எம்பெருமானே, உனக்குப் பிடித்த நல்லவர்களோடு இங்கே வா, உன் விருப்பம்போல் இங்கேயே திரிந்துகொண்டிரு, உன்னுடைய திருவுள்ளத்துக்கு எது மகிழ்ச்சியோ அதுவே எங்களுக்கும் மகிழ்ச்சி, எங்களுடைய பெண்மை அதை ஏற்றுக்கொள்ளும், பெருமானே, நீ பசு மேய்க்கச் செல்லவேண்டாம், கம்சனுடைய ஏவலின்படி அங்கே பல அசுரர்கள் வெவ்வேறு உருவத்தில் வந்து திரிவார்கள், அவர்களிடம் நீ அகப்பட்டால் உங்களுக்கிடையே கொடிய போர் உண்டாகும், துன்பம் ஏற்படும், ஆகவே, என் சொல்லைக் கேள், பசு மேய்க்கப் போகாதே, அடடா.