பாடல் 11
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு அத்
திருவடி திருவடிமேல் பொருநல்
சங்கு அணி துறைவன் வண் தென் குருகூர்
வண் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை
அவனொடும் பிரிவதற்கு இரங்கி, தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான்
உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே.
சிவந்த கனியைப்போன்ற திருவாயைக் கொண்ட எங்கள் ஆயர் தலைவன், எம்பெருமான், தாமிரபரணி நதியிலே சங்கணித்துறை என்ற இடத்தை உடையவர், வளமான திருக்கூரைச் சேர்ந்த வளமை நிறைந்த சடகோபன் எம்பெருமானின் திருவடிகளைப்பற்றி ஆயிரம் திருப்பாடல்களைப் பாடியுள்ளார், அவற்றில் இந்தப் பத்து திருப்பாடல்களும், ஆயர்குலப்பெண்கள் ஆராய்ந்து சொன்ன சொல்மாலையாகும். எம்பெருமான் பசுக்கூட்டங்களை மேய்க்கச் செல்லும்போது, இந்த ஆய்ச்சியர்கள் அவனைப் பிரிவதை எண்ணி வருந்தினார்கள், ஆகவே, ‘பெருமானே, நீ பசுக்கூட்டங்களை மேய்க்கச் செல்லவேண்டாம்’ என்றார்கள். அந்தக் கருத்தைச் சொல்லும் இந்தப் பாசுரங்களை வாசித்தால், மற்ற பாசுரங்களின்மூலம் கிடைக்கும் நற்பயன்கள் அனைத்தும் கிடைக்கும்.