பாடல் - 11
ஊழிதோறும் ஊழி உருவும் பேரும்
செய்கையும் வேறவன், வையம் காக்கும்
ஆழி நீர்வண்ணனை, அச்சுதனை
அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன
கேழ்இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள்
இவை திருப்பேரெயில் மேய பத்தும்
ஆழி அம் கையனை ஏத்தவல்லார்
அவர் அடிமைத்திறத்து ஆழியாரே.
ஒவ்வோர் ஊழிக்காலத்திலும் வெவ்வேறு திருவுருவம், வெவ்வேறு திருப்பெயர், வெவ்வேறு திருச்செய்கைகள் என பக்தர்களுக்கு அருள்கிறவன், வையத்தைக் காக்கும் கடல்நீர்வண்ணன், அச்சுதன், எம்பெருமான், அந்தப் பெருமானைப்பற்றி அழகிய குருகூர்ச் சடகோபன் பாடிய ஒப்பற்ற அந்தாதிப் பாடல்கள் ஆயிரம், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களும் திருப்பேரெயிலைப்பற்றியவை. இந்தப் பாடல்களைப் பாடி, சக்ராயுதத்தைக் கையிலேந்திய அப்பெருமானைப் போற்றவல்லவர்கள், சக்கரத்தாழ்வாரைப்போல் அவனுக்கு அடிமையாகித் திருப்பணிகளைப் புரிவார்கள்.