பாடல் 1
தாள தாமரைத் தடம் அணி வயல் திருமோகூர்
நாளும் மேவி நன்கு அமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்கு உடைச் சுரிகுழல் கமலக் கண், கனிவாய்
காளமேகத்தை அன்றி மற்று ஒன்று இலம் கதியே.
நாளத்துடன் கூடிய தாமரைகளைக்கொண்ட தடாகங்கள் அழகாகச் சூழ்ந்திருக்க, வயல்கள் நிறைந்த திருமோகூரிலே எப்போதும் எழுந்தருளி அசுரர்களை அழிக்கும் எம்பெருமான், நான்கு தோள்களைக்கொண்டவர், சுருண்ட தலைமுடி, தாமரைபோன்ற திருக்கண்கள், கனிபோன்ற திருவாயைக் கொண்ட கருமேகம், அவரைத்தவிர வேறு யாரும் எங்களுக்குக் கதியில்லை.