பாடல் 11
ஒழிவு இன்றித் திருமூழிக்களத்து உறையும் ஒண்சுடரை
ஒழிவு இல்லா அணி மழலைக் கிளிமொழியாள் அலற்றிய சொல்
வழு இல்லா வண்குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே.
திருமூழிக்களத்திலே எழுந்தருளியிருக்கும் ஒளிமிகுந்த சுடர்வடிவான எம்பெருமான், அந்தத் திருத்தலத்தைவிட்டு என்றைக்கும் விலகாமல் அருள்புரிகிறார். அத்தகைய எம்பெருமானைவிட்டு நீங்க விரும்பாத ஒரு பெண், அவரை நீங்கி ஒரு கணமும் வாழமுடியாமல் தவிக்கிறவள், அழகிய மழலையிலே கிளிபோலப் பேசுகிறவள், அவள் பெருமானை எண்ணிச் சொன்ன சொற்களைக் குற்றமில்லாத, சிறப்புமிகுந்த குருகூர்ச் சடகோபர் ஆழ்ந்து பாடியுள்ளார், அவர் பாடிய அழிவில்லாத ஆயிரம் திருப்பாடல்களிலே இந்தப் பத்து பாடல்களையும் யார் பாடுகிறார்களோ, அவர்களுடைய பிறவி நோய் தீரும்.