பாடல் 2
கொடி ஏர் இடைக் கோகனத்தவள் கேள்வன்,
வடி வேல் தடம் கண் மடப்பின்னை மணாளன்,
நெடியான் உறை சோலைகள் சூழ் திருநாவாய்
அடியேன் அணுகப்பெறு நாள் எவைகொலோ.
கொடிபோன்ற இடையைக் கொண்டவளான தாமரையிலே எழுந்தருளியிருக்கும் திருமகளின் கணவன், கூரான வேலைப்போன்ற பெரிய கண்களைக் கொண்ட அழகிய நப்பின்னையின் மணாளன், நெடியவன், எம்பெருமான் உறைகிற திருத்தலம், சோலைகள் சூழ்ந்த திருநாவாய். அடியேன் அங்கே சென்று எம்பெருமானைத் தரிசிக்கும் நாள் என்றைக்கோ!