பாடல் 9
வைகுந்தம் புகுதலும், வாசலில் வானவர்
‘வைகுந்தன் தமர் எமர், எமது இடம் புகுத’ என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்,
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே.
எம்பெருமான் அடியவர்கள் வைகுந்தத்தில் நுழைந்ததும், அங்கே வாசலில் காத்திருந்த வானவர்கள் அவர்களை வரவேற்றார்கள், ‘வைகுந்தனாகிய எம்பெருமானின் அடியவர்களாகிய நீங்கள், எங்களுடைய தலைவர்களைப்போன்றவர்கள், எங்கள் இடத்துக்கு வருக’ என்று அழைத்தார்கள், வைகுந்தத்திலிருக்கும் அமரர்களும் முனிவர்களும் இந்த அடியவர்களைக் கண்டு வியந்தார்கள், ‘மண்ணுலகில் பிறந்தவர்கள் வைகுந்தம் புகுவது பெரும் பாக்கியமே’ என்று வாழ்த்தினார்கள்.