சங்ககால மறவர் - செ.மா.கணபதி; பக்.640; ரூ.400; சங்கத் தமிழ்ப் பதிப்பகம், 11, மயன் முல்லை வளாகம், அப்பல்லோ காலனி, பெருமாள் புரம், திருநெல்வேலி -7.
சங்க காலத்தில் வாழ்ந்த பழந்தமிழ்க் குடிகளை சிற்றரசர், குறுநிலைத் தலைவர் குடிகள், சிறுகுடிகள், பதினெண்குடிகள் என வகைப்படுத்தியுள்ளனர். இவர்களைப் பற்றி சுருக்கமாக இந்நூல் எடுத்துரைக்கிறது.
சங்ககால மறவர்களின் போர் ஒழுக்கங்களையும், போர் முறைகளையும், வாழ்க்கை நெறிமுறைகளையும் எடுத்துரைப்பதற்காகவே இயற்றப்பட்டது புறப்பொருள் வெண்பாமாலை என்ற இலக்கண நூல். சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய இலக்கியங்களில் உள்ள சங்ககால மறவர் பற்றிய செய்திகளே இந்நூலில் அதிகம் இடம்பெற்றுள்ளன.
பெருங்கற்காலச் சமுதாயம் பல்வேறு குழுக்களைக் கொண்டிருந்திருக்கிறது. இக்குழு ஆட்சியே பின்னர் வந்த மூவேந்தர் ஆட்சிக்கு வித்திட்டுள்ளது. இக்குழுக்கள் பற்றி சங்க இலக்கியங்கள் விரிவாகப் பேசுகின்றன. இவர்களில் பரதவர், கோசர், ஆவியர், ஓவியர், ஆயர், வேளிர், ஆண்டார், வில்லோர், மறவர், கொங்கர், குறவர், மலையர், குடவர், புலியர், புலையர், கடம்பர், கள்வர் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவ்விதக் குழுக்கள் அமைந்த இடங்களே பின்னர் பழந்தமிழ்க் குடிகளாக வளர்ச்சி பெற்றுள்ளன. இவர்களுள் ஒரு குடியினரான மறவர் பற்றி இந்நூல் விரித்துரைக்கிறது.
சங்க காலத்து மறவர்கள் வாட்குடி மறவர், வேட்டுவ மறவர், வெட்சி மறவர், கரந்தை மறவர் உள்ளிட்ட பத்துப் பிரிவுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் பற்றிய விளக்கம் தனித்தனிக் கட்டுரையாகவே இந்நூலில் தரப்பட்டுள்ளன.