ராமானுஜர் மற்றும் வைணவ சமயச் சான்றோர்கள்- கா.சே. மணவாளன்; பக்.206; ரூ.160; ஆனந்த நிலையம், சென்னை - 83; )044- 2474 0281.
ராமானுஜர் மற்றும் வைணவச் சமயச் சான்றோர்களான நாதமுனிகள், ஆளவந்தார், திருக்கச்சி நம்பிகள், கூரேசர், முதலியாண்டான், ராமானுஜர், நஞ்சீயர், நம்பிள்ளை என வரிசைப்படுத்தி அவர்களது வாழ்க்கை அனுபவங்களை தனித் தலைப்புகளிட்டு படிக்க சுவாரசியம் கூட்டி செய்யப்பட்டிருக்கிறது இந்நூல்.
கூரத்தாழ்வார் பரமபதத்தை அடையப் போவதை உணர்ந்த ராமானுஜர், அதை சகிக்க முடியாதவராய் ""எம்மைப் பிரிய உம்முள்ளத்தில் ஏற்பட்ட குறையாது? அல்லது சீற்றமென்ன?'' என்கிறார். துடித்துப்போன கூரத்தாழ்வார், ""வைகுந்தத்திலும் ராமானுஜர் சரணார விந்தமே தஞ்சமென்றிருப்பேன்!'' ""முன்னர் செல்வது வைகுந்தம் வரும்வரை எதிர்கொண்டு பாதங்களைப்
பற்றவே'' என்கிறார் கூரத்தாழ்வார். மெய்சிலிர்க்க வைக்கிறது கூரத்தாழ்வாரின் குருபக்தி! இது போன்று ஆழ்வார்களின் வாழ்க்கையில் நடந்த அரிய நிகழ்வுகளைப் படிக்கும்போது நமக்கு ஆச்சரியத்தையும் சுவாரஸ்யத்தையும் ஒருங்கே தருகின்றன.
இந்நூலில் பிற்சேர்க்கையாக ஆசாரிய பரம்பரை குறித்த, அவர்களது பெயர்கள், பிறந்த மாதம், நட்சத்திரம், செய்தருளிய நூல்கள் ஆகியவற்றை அட்டவணையாகக் கொடுத்திருப்பது சிறப்பு. மேலும், திருவாய்மொழி வியாக்கியானங்களுக்கான விளக்கவுரைகள், நாலாயிர விவரம், நான்காமாயிரம், திருவாய்மொழி, வைணவம் பற்றிய விபரங்கள், திருவரங்கத்தமுதனார்
அருளிச்செய்த ராமானுஜ நூற்றந்தாதி, மணவாளமாமுனிகள் அருளிச்செய்த உபதேசரத்தினமாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி பாடல்கள் ஆகிய அனைத்தையும் எளிமையான முறையில் மாலையாகத் தொடுத்து அலங்கரித்திருக்கிறார் ஆசிரியர். வைணவத்தை அறிய உதவும் சிறந்த படைப்பு!