இராமாயண ரகசியம் -தமிழருவி மணியன்; பக்.208; ரூ.140; கற்பகம் புத்தகாலயம், சென்னை-17; )044 - 2431 4347.
வால்மீகி இயற்றிய ராமாயண காவியத்தை தமிழில் வழங்கிய கம்பன் அதை தமிழ்ப் பண்புகளுக்கு ஏற்ப எவ்வாறு சீராக்கி வழங்கியிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ள இந்நூல் உதவும்.
தமிழருவி மணியனின் இந்த நூல், வால்மீகி மற்றும் கம்பனின் விவரிப்புகளுக்கு இடையே உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை மிக நன்றாகவே எடுத்துக் கூறுகிறது. அது மட்டுமின்றி, நூலாசிரியரின் ஆழ்ந்த தமிழ்ப் புலமையும், மொழி ஆளுமையும் வாசகர்களை ஈர்க்கும் வகையில் நன்கு வெளிப்பட்டுள்ளன.
பொதுவாக இலக்கியங்களில் எதிர்நாயகனின் நற்பண்புகளைப் போற்ற மாட்டார்கள். அவனது பலவீனங்களும், தீய குணங்களும் மறைக்கப்படும். ஆனால், ராமாயணத்தில் ராவணனின் நற்பண்புகள் மற்றும் சிறப்புகளும் கூட மறைக்காமல் கூறப்பட்டுள்ளன. "பண்புநலன்களை ஒப்பிடும்போது, இராமனுக்கு நேர் எதிரானவன் இந்திரசித்தன். ஆனாலும் "தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்ற தத்துவத்தில் இந்திரசித்தன் இராமனுக்கு இணையாக வந்து நிற்கிறான். இது கசப்பான உண்மை. ஆனாலும் யாராலும் மறுக்க முடியாத உண்மை' என நூலாசிரியர் சுட்டிக்காட்டுவது, மனிதர்களின் ஒருபக்கத்தை மட்டும் பார்த்து அவர்களைப் பற்றி முடிவு செய்துவிடக் கூடாது என்பதை உணர்த்துகிறது.
"ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் "பிறனில் விழையாமை' என்ற அதிகாரத்தைப் படைத்து காமத்தை நெறிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அழுத்தமாக உணர்த்தினார். அவர் வகுத்த இலக்கணத்திற்கு ஓர் இனிய இலக்கியமே கம்பராமாயணம்' என்று கம்பராமாயணத்தின் சாரத்தைக் கண்டறிந்து நூலாசிரியர் வலியுறுத்துவது சிறப்பு.
பழைய இலக்கியமாயினும், அதை இக்காலத்துக்குப் பொருந்தும் வகையில் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இந்நூல் வழிகாட்டுகிறது.