பன்முக நோக்கில் குறுந்தொகை - இரா.மோகன்; பக். 252; ரூ.160; வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17; )044 - 2434 2810 .
குறுந்தொகை பற்றி பல்வேறு தருணங்களில், பல்வேறு கோணங்களில் எழுதப்பட்ட 28 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். நல்ல குறுந்தொகை, தனித்திறன் ஒளிரும் குறுந்தொகைப் புலவர்கள், பன்முக நோக்கு ஆகிய மூன்று தலைப்புகளில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகை, காதலர்-காதலியின் தலைமைப் பண்புகள், தோழியின் மதிநுட்பம், மக்களின் விழுமிய வாழ்வியல் நெறிகள், ஆடவரின் ஆளுமைப் பண்புகள், உளவியல், இயற்கை, உவமைகள், பறவைகளின் பாச உணர்வு எனப் பலவற்றையும் எடுத்துரைக்கிறது.
மிளைப்பெருங் கந்தனின் பாடல்கள் பாலியல் நோக்கிலும், மிளைக்கந்தனார் பாடல் ஆடவரை உளவியல் நோக்கிலும், வெள்ளிவீதியாரின் பாடல் சாகா வரம்பெற்றப் பாடலாகவும் பார்க்கப்பட்டுள்ளது. கபிலரின், "யாரும் இல்லை தானே கள்வன்' என்ற பாடலை "திருக்கண்ணபுரத்தலத்தான் திருமாளிகை செüரிபெருமாள் அரங்கன்' உரைத்திறனுடனும், அப்பாடலுக்கு நோக்குக் கோட்பாட்டின் வழி நின்று உ.வே.சா.வின் நுண்ணிய உரை விளக்கத்துடனும், பண்டிதமணியின் ஒப்பியல் நோக்குடனும் சென்று நயமாக விளக்கப்பட்டுள்ளது.
தலைவன், தலைவி, தோழி, பரத்தை ஆகியோர் கூற்றில் உள்ள உவமை நயங்கள், இவ் உவமைகளுக்கு, க.கைலாசபதி, சோ.ந.கந்தசாமி, இ.முருகையன், பண்டிதமணி போன்றோர் கூறிய நயவுரைகள் என பலவற்றைக் கூறியிருப்பது படித்து ரசிக்கும்படி உள்ளது. குறுந்தொகை பதிப்பு வரலாறு குறித்தும் ஒரு கட்டுரை சிறப்பாக விளக்குகிறது. மொத்தத்தில் குறுந்தொகையைத் தேடிப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் நூல்.