கீதை காட்டும் ஞானப் பாதை- க.மணி; பக். 146; ரூ. 120; அபயம் பதிப்பகம், 19, ஏ.கே.ஜி.நகர், முதல் தெரு, உப்பிலிபாளையம், கோவை- 641 015.
நாம் எவ்வளவோ நல்ல விஷயங்களைப் பார்க்கிறோம், கேட்கிறோம், படிக்கிறோம். இருந்தாலும் நல்ல
விஷயங்களைக் கடைபிடிப்பது அவ்வளவு சுலபமாக இருப்பதில்லை. இதேபோல், ஒழுக்கத்தைப் போதிக்க நல்ல நூல்கள் இல்லை என்கிற குறையும் இருக்கிறது. ஆனால், பகவத் கீதையின் 13-ஆவது அத்தியாயத்தில் நல்ல விஷயங்களை பகவான் கிருஷ்ணர் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இச்சிறிய நூல் அத்தகைய 20 ஒழுக்கங்களைச் சிறப்பித்துக் காட்டுகிறது.
உதாரணமாக, இந்நூலில் இடம்பெற்றுள்ள சிந்திக்கத் தக்க சில விஷயங்கள்:
"பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் தூய்மையாக இருந்தால் பேருந்து பயணம் எத்தனை சுகமாக இருக்கும்? சுத்தம் ஓர் அற்புதமான மதிப்பு. சுத்தமான வீடு, ஆடை, பாத்திரம், பண்டம், சுத்தமான வீதி போன்றவை எத்தனை சுகம் என்பது சொல்லித் தர வேண்டிய விஷயமில்லை. புறத்தூய்மைகளாகிய இவை உள்ளத்தில் புத்துணர்ச்சியையும் பளிச்சென்ற கவன சக்தியையும் ஏற்படுத்துகின்றன' .
"மன அழுக்குகளிலெல்லாம் நியாயமே இல்லாதது பொறாமை'
"தன்னிடமிருந்து தானே தப்பித்துக்கொள்வதற்கு மனிதர்கள் நிறைய இடங்களைக் கண்டுபிடித்துள்ளனர். கேளிக்கைப் பூங்காக்கள், தீம் பார்க்குகள், திரையரங்குகள், தொலைக்காட்சிப் பெட்டி, விளையாட்டு மைதானம், பத்திரிகைகள், சஞ்சிகைகள், விழாக்கள்.. சிலர் போதை மருந்து, மாத்திரை, மது என தப்பி ஓடப் பார்க்கிறார்கள். ஏதோ ஒரு விதத்தில் எல்லோரும் மாவரைக்கும் எந்திரம் போன்ற வாழ்க்கையிலிருந்து தப்பி ஓட முயலுகிறோம்' . இப்படி நிறைய.
ஒழுக்கத்துடன் வாழ இந்நூல் வழிகாட்டும்.