சின்னச் சின்ன சிறகுகள் - தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா; பக்.306; ரூ.250; ஓங்காரம், 50. காமாட்சியம்மன் கோயில் தெரு, புதுச்சேரி- 605 001.
ஆன்மிக உலகில் புக விரும்பும் மக்களுக்கு இறை, வாழ்வியல் தத்துவத்திற்கான வழிகாட்டியாக இந்நுலை வெளிக் கொணர்ந்திருக்கிறார் நூலாசிரியர்.
ஒரு கலையை கற்க சற்குரு எவ்வளவு முக்கியம் என்பதை விரிவாக விளக்கிக் கூற முற்பட்டிருப்பது அருமை. சற்குருவானவர் ஆத்ம, ஸ்ரீ, மகாவித்தை என மூன்று வித்தைகளுக்கு அதிபதியாக விளங்குகின்றார் என்றும், காலங்களுக்கும் பிறவிகளுக்கும் அப்பாற்பட்டவர் என்றும் நூலாசிரியர் பதிவு செய்கிறார்.
இப்பிரபஞ்சத்தில் காண்பது, உணர்வது இரண்டு. ஒன்று அண்டம், மற்றொன்று பிண்டம். இவற்றைப் பற்றியும் விரிவாக விளக்குகிறார்.
மனிதன் நினைத்தால் மற்றொரு பிரம்மாண்டமான உலகை நிர்மாணிக்கலாம் என்று நம்பிக்கை ஊட்டுவதுடன், தன் வாழ்நாள் முடிவதற்குள் அவன் செய்ய வேண்டியவற்றையும், தெரிந்து கொள்ள வேண்டியவற்றையும், மரணத்தை வென்று ஆனந்த அமைதி அடைவதற்கான வழிகளையும் நூலாசிரியர் வகுத்துத் தந்திருக்கிறார். மனிதனின் மேன்மைக்கு வழிகாட்டும் நூல்.