பெரியநாயகம் பிள்ளை வரலாறு - தொகுப்பாசிரியர்: ஜே.சந்திரபால்; பக்.238; ரூ.150; மதுரை சென்டர் ஆப் சோஷியல் அண்டு கல்ச்சுரல் டிரஸ்ட், மதுரை-1.
மதுரை அமெரிக்க மிசன் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றியவர் பெரியநாயகம் பிள்ளை (1846 - 1923). அவர் தனது கைப்பட எழுதிய வாழ்கைக் குறிப்புகள் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. தனி மனிதரின் ஒருவரின் வாழ்க்கைக் குறிப்புகள் என்பதைத் தாண்டி, 19 ஆம் நூற்றாண்டின் தமிழக மக்களின் வாழ்க்கையை மிக அற்புதமாக இந்நூல் சித்திரிக்கிறது. போக்குவரத்து வசதியில்லாத அக்காலத்தில் இராமநாதபுரத்திலிருந்து திருநெல்வேலி வரை பெரியநாயகம் பிள்ளையின் பாட்டனார் நடந்தே சென்றது, அக்காலத் திருமண பழக்க வழக்கங்கள், ஒரு பவுன் தங்கம் ரூ.10க்கு விற்றது, மனிதர்களுக்கிடையிலான உறவுமுறைகள், பண்புகள், தாது வருஷப் பஞ்சம் ஏற்படுத்திய பாதிப்புகள், அக்காலத்திலிருந்த மருத்துவமுறைகள் என நாம் அறியாத பலவிஷயங்களை இந்நூலின் மூலம் தெரிந்து கொள்ளலாம். நூலாசிரியர் வாழ்ந்த காலத்துக்கே இந்நூல் நம்மை அழைத்துச் செல்கிறது. அக்கால சமூக நிலைமைகளைத் தெரிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் பயன்படும் நூல்.