வைகைக் கதைகள்- தொகுப்பாசிரியர்: சு.சண்முகசுந்தரம்; பக்.604; ரூ.600; காவ்யா, சென்னை-24; 044- 2372 6882.
வைகை நதி ஓடிவரும் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற சிற்றிதழ்கள், பேரிதழ்களில் எழுதிய எழுத்தாளர்களின் 56 சிறுகதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
இதில் கவிஞர் வைரமுத்து எழுதிய சிறுகதை முதல் நவீனகால எழுத்தாளர் லக்குமணசாமி எழுதிய சிறுகதைகள் வரை இடம்பெற்றுள்ளன.
வைகை நதி நாகரிகத்தை வெளிப்படுத்தும் வகையில் கதைகள் தொகுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தாலும், குறிப்பாக சில கதைகளைத் தவிர, பல கதைகளில் தென்மாவட்ட மக்களின் வாழ்க்கை, பழக்க, வழக்கங்கள், பேசும் மொழி இடம்பெற்றிருப்பதைக் காண முடிகிறது.
ஆத்மார்த்தியின் "பைத்திய நிசப்தம்' மதுரையின் இருட்டுப் பக்கங்களை வெளிச்சம்போட்டு காட்டுவதாக உள்ளது. காமுத்துரையின் "மந்தைக்காடு' சிறுகதை தேனி பகுதி மக்கள் காலைக்கடன் கழிப்பதில் உள்ள அவலங்களை கன்னத்தில் அறைந்ததுபோல சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.
மதுரை மக்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் சிறுகதைகள் என்கிற வகையில் இத்தொகுப்பு வாசகர்களின் கவனத்தைப் பெறும் எனச் சொல்லலாம்.
இதுபோன்ற முயற்சிகள் வரவேற்கத்தக்கவை. எழுத்து, சொற்பிழைகளைத் தவிர்த்திருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.