தெய்வ வழிபாட்டு தத்துவ இரகசியங்கள் - பிரபோதரன் சுகுமார்; பக்.384; ரூ.200; அயக்கிரிவா பதிப்பகம், சென்னை - 5; 044 - 2844 4275.
அமரகவி சித்தேஸ்வரரின் நிஜானந்த போதம் நூலைத் தழுவி எழுதப்பட்டது இந்நூல். இந்து மதத்தில் ஏன் இத்தனை தெய்வங்கள்? இந்த தெய்வங்களுக்கு ஏன் இத்தனை கைகள், தலைகள், ஆயுதங்கள், வாகனங்கள் என ஆன்மிக அன்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் எழக்கூடிய கேள்விகளுக்கு விடைதருவதாக அமைந்துள்ளது இந்நூல். இந்நூலில் விரவிக்கிடக்கும் ஆன்மிக முத்துக்குவியலில் இருந்து சில முத்துகள்:
இறைவன் எல்லையற்ற ஞானம் மிக்கவன், எல்லையற்ற பேராற்றல் படைத்தவன், எங்கும் நீக்கமற நிறைந்தவன்.
கோயில், குளங்களை சுற்றிவருவதும், கிரிவலம் வருவதும், அன்னதானம், அபிஷேக ஆராதனைகள் செய்வது மட்டுமே ஆன்மிகம் என்று மனிதன் நினைக்கின்றான். தன்னைத் தானேஅறிந்துகொள்ளும் தீவிரமுயற்சிகளில் ஈடுபடாமல், மனதைக் கடந்து உள்முகமாகச் சென்று கடவுளை அறியாமல் இருப்பது அறியாமையே.
ஆழ்நிலைத் தியானத்தின் நோக்கமே காலம், இடம் முதலான தடைகளைத் தாண்டி கட்டுக்கடங்காத ஆகாய தத்துவத்தை.. உட்கார்ந்த இடத்திலிருந்தே இந்த உலகத்திலும் பிரபஞ்சத்திலும் நடக்கும் பல விஷயங்களை உணர்ந்து கொள்வதாகும்.
திருக்கோயில்களின் அமைப்பு முறையானது மனிதனின் ஸ்தூல உடம்பின் சூட்சுமங்களை விளக்கும் விதமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆன்ம நேய வாசகர்களுக்கான இத்தகைய அரிய விஷயங்கள் இந்நூலில் நிரம்பியுள்ளன.