திராவிட இயக்க வரலாற்றில் அன்பில் - செ.வீரபாண்டியன்: பக்.348; ரூ.200; செம்பியன் பதிப்பகம், திருச்சி-18; )0431-2764466.
ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர், தி.மு.க தலைவர் கருணாநிதியின் நம்பிக்கைக்கு உரியவர்களில் ஒருவர் அன்பில் தர்மலிங்கம். அவருடைய தியாகம், மனிதநேயம், நெஞ்சுறுதி, போராட்ட வாழ்க்கை ஆகியவை இந்நூலில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவர் 1937-ஆம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் பெரியாரின் பேச்சை முதன் முதலாகக் கேட்டு தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் உறுப்பினரானது, முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றது, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது திருச்சி மாநகரில் நகர வளாக மைதானத்தில் நான்கு புறமும் காவலர்கள் அரண்போல் நின்று தடுக்க முயற்சித்தபோது அவர்கள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, கருப்புக் கொடியேற்றிவிட்டு மைதானத்தை விட்டு வெளியேறிய சம்பவம், அவர் நடத்திய சிறப்பு மிக்க மாநாடுகள் என நூலின் ஒவ்வோர் அத்தியாயமும் வியக்க வைக்கிறது.
குறிப்பாக திராவிட இயக்க வரலாற்றின் ஆணி வேராக விளங்கி வரும் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் அன்பையும், மதிப்பையும் பெற்று தான் பிறந்த அன்பில் கிராமத்துக்கும், திருச்சி மாவட்டத்துக்கும், தமிழகத்துக்கும் அன்பில் தர்மலிங்கம் பெருமை சேர்த்தது குறித்து தெளிவான நடையில் இந்நூல் விவரிக்கிறது.