அனைத்து தோஷங்களும் நீங்க வழிபட வேண்டிய ஜம்புகேஸ்வரர் கோவில், திருவானைக்கா

பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 60-வது தலமாக இருக்கும்.
அனைத்து தோஷங்களும் நீங்க வழிபட வேண்டிய ஜம்புகேஸ்வரர் கோவில், திருவானைக்கா

பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 60-வது தலமாக இருக்கும் திருவானைக்காவல், பஞ்சபூதத் தலங்களில் அப்பு (நீர்) தலம். தமிழ்நாட்டில் உள்ள பெரிய சிவாலயங்களில் திருவானைகாவல் தலமும் ஒன்று. ஆறு ஆதாரத் தலங்களில் இத்தலம் சுவாதிஷ்டானத் தலம். தேவாரம் பாடிய மூவராலும் பதிகம் பாடப்பெற்ற சிறப்புடைய தலங்களில் ஒன்று. இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டு வர சகல தோஷங்கள் நீங்கும். திருமணத் நடை விலகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும்

இறைவன் பெயர்: ஜம்புகேஸ்வரர்

இறைவி பெயர்: அகிலாண்டேஸ்வரி

இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் மூன்றும், திருஞானசம்பந்தர் பதிகம் மூன்றும், சுந்தரர் பதிகம் ஒன்றும் என மொத்தம் 7 பதிகங்கள் உள்ளன.

எப்படிப் போவது
திருவானைக்கா, திருச்சி நகரின் ஒரு பகுதியாகும். நகரின் பல பகுதிகளில் இருந்தும் திருவானைக்காவல் வர பேருந்து வசதிகள் இருக்கின்றன.

ஆலய முகவரி

அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோவில்
திருவானைக்காவல்
திருவானைக்காவல் அஞ்சல்
திருச்சி வட்டம்
திருச்சி மாவட்டம் – 620 005.

இவ்வாலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு
புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர், தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர். சிவலிங்கம், கூரையில்லாமல் வெய்யில் மழையில் கிடந்தது. சிலந்தி, சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும், மற்றும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது.

யானை, சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலை பின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க நினைத்த சிலந்தி, யானையின் துதிக்கையில் புக, யானையும் சிலந்தியும் போராட, கடைசியில் இரண்டும் மடிந்தன. 

இவற்றின் பக்திக்கு மெச்சிய சிவபெருமான், யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார். சிலந்தி, மறுபிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன், யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலை மீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும்.

இந்த தல வரலாற்றை திருநாவுக்கரசர் தனது திருக்குறுக்கை சிவஸ்தலம் பதிகத்தில் (4-ம் திருமுறை - "ஆதியில் பிரமனார் தாம்" என்று தொடங்கும் பதிகம் - (4-வது பாடலில்) தெரிவிக்கிறார்.

சிலந்தியும் ஆனைக்காவில் திருநிழல் பந்தர் செய்து
உலந்து அவண் இறந்த போதே கோச்செங்கணானும் ஆகக்
கலந்த நீர்க் காவிரீ சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்
குலந்தனில் பிறப்பித்திட்டார் குறுக்கை வீரட்டனாரே 

இப்பாடலின் பொழிப்புரை - 
திருவானைக்காவிலுள்ள பெருமானுக்கு அழகிய நிழலைத்தரும் பந்தலை அமைத்த; 

சிலந்தி இறந்தபின் மறுபிறப்பில், சுவாமியுடன் கலந்து பயின்ற நீரை உடைய;
காவிரியாற் சூழப்பட்ட சோழ நாட்டில் அந்நாட்டு மன்னர் மரபிலே கோச்செங்கண்ணான்;
என்ற பெயருடைய அரசனாகுமாறு பிறப்பித்து விட்டார் குறுக்கை வீரட்டனார்

கோவில் சிறப்பு 
காவேரி ஆற்றுக்கும் கொள்ளிடத்துக்கும் இடைப்பட்ட தீவுப்பகுதியில், திருவரங்கத்துக்கு அருகே அமைந்துள்ளது. திருவானைக்கா, பஞ்சபூத ஸ்தலங்களில் அப்பு ஸ்தலம். மூலஸ்தான லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்துக்குக் கீழே இருப்பதால், எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் அலயம் ஒரு மிகப்பெரிய கோவில். சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பில், நீண்ட உயரமான மதில்களும், நான்கு திசைகளிலும் கோபுரங்களும், ஐந்து பிராகாரங்களும் உடையது. 

கிழக்கு திசையிலுள்ள கோபுரம் 13 நிலைகளை உடையதாகும். ஆனால், இக்கொபுர வழி உபயோகத்தில் இல்லை. மேற்கிலுள்ள 7 நிலை கோபுர வாயிலே பிரதான நுழைவாயிலாக உள்ளது. இக்கோபுர வாயில் வழியே உள்ளே சென்று 2-வது கோபுர வாயிலையும் கடந்து நேரே உள் சென்றால் இறைவன் சந்நிதியை அடையலாம். அம்மன் அகிலாண்டேஸ்வரியின் சந்நிதி, நான்காம் பிராகாரத்தில் உள்ளது. தனி சந்நிதியில் கிழக்கு நோக்கியவாறு அகிலாண்டேஸ்வரி காட்சி தருகிறாள். மூலவர் ஜம்புகேஸ்வரர், ஐந்தாம் உள்பிராகாரத்தில் அப்புலிங்கமாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார். இறைவன் சந்நிதியிலுள்ள 9 துளை சாளரம் வழியே இறைவனை தரிசித்தால், ஒன்பது தீர்த்தங்களில் நீராடிய பலன் கிடைக்கும். இந்த துவாரங்கள் வழியே இறைவனை தரிசிப்பதுதான் முறையாகக் கருதப்படுகிறது.

திருவானைக்கா, அன்னை அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலம். அகிலாண்டேஸ்வரி அம்மையின் காதுகளில் இருக்கும் காதணிகள் பெரிதாக பக்தர்களின் பார்வைக்கு மிக நன்றாக பளிச்சென்று தெரியும். இந்தக் காதணிகளை தாடகங்கள் என்று அழைப்பார்கள். அம்பாள் முன்னொரு காலத்தில் மிக உக்கிரமான உருவத்துடன் கொடூரமாக இருந்ததாகவும், பக்தர்கள் வழிபாடு செய்ய மிகவும் அச்சமுற்றதாகவும் இருக்க, ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர ரூபமான இக்காதணிகளைப் பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்தார் என்று தல வரலாறு கூறுகிறது. அன்னையின் உக்கிரத்தை தணிப்பதற்காக முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

உஷத் காலத்தில் கோபூஜையும், உச்சிக் காலத்தில் சுவாமிக்கு தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. உச்சிக்கால பூஜையின்போது, சிவாச்சாரியார் அன்னை அகிலாண்டேஸ்வரிபோல பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்துகொண்டு, மேள வாத்தியங்களோடு யானை முன்னே செல்ல, சுவாமி சந்நிதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். மேலும், இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே நேரில் ஒரு சித்தரைப்போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்கு திருநீறை கூலியாகக் கொடுத்ததாக தல வரலாறு கூறுகிறது. பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தல வரலாறு கூறுகிறது. இதனால் இம்மதிலை திருநீற்றான் மதில் என்று அழைக்கிறார்கள்.

மேலும், இவ்வாலயத்தில் உள்ள ஆதி ஜம்புகேஸ்வரர் சந்நிதியும், குபேரலிங்கம் சந்நிதியும் பார்த்து தரிசிக்க வேண்டியவை. இத்தலத்திலுள்ள இறைவனை தரிசிப்பதற்காகவே ரங்கநாதர் ஶ்ரீரங்கத்தில் எழுந்தருளி இருப்பதாக கஜாரண்ய ஷேத்திர மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. வருடத்தில் ஒருநாள் ஶ்ரீரங்கத்தில் இருந்து ரங்கநாதர் புறப்பட்டு இத்தலம் வந்து தங்கியிருந்து, அன்றிரவு விசேஷ அலங்காரத்துடன் ஶ்ரீரங்கம் திரும்பும் உற்சவம் நடைபெறுகிறது. திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் ஆலயம் வாழ்நாளில் தரிசிக்க வேண்டிய ஆலயங்களில் ஒன்றாகும். 

சம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர் மயிலாடுதுறை சிவகுமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com