மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கு எலாம்
எல்லையான பிரானார் இருப்பிடம்
கொல்லை முல்லை கொழுந்தகை மல்லிகை
நல்ல சேர் கடம்பூர்க் கரக்கோயிலே
விளக்கம்
மல்லை = வளம் பொருந்திய. ஞாலம் = உலகம். உயிர்களுக்கு முடிவாக பெருமான் விளங்கும் நிலை இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. முடிவாக இருக்கும் பெருமான் முதலாகவும் இருக்கும் நிலையும் முடிவினை குறிப்பிட்டதன் மூலம் உணர்த்தப்படுகின்றது என்று நாம் கொள்ள வேண்டும். முடிவு என்று குறிப்பிட்டு, அனைத்து உயிர்களும் சென்று சேர விரும்பும் முக்தி நிலையாக விளங்கும் பெருமான் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது.
பொழிப்புரை
வளம் பொருந்திய இந்த உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களும் சென்றடைய விரும்பும் முடிவான முக்தி நிலையாக உள்ள பிரான் உறையும் இடம் யாதெனில், காட்டில் வளரும் முல்லை மலர்கள், நிலவளத்தால் பெரிதாக வளரும் மல்லிகை மலர்கள் போன்ற நல்ல நறுமணம் உடைய மலர்கள் சேரும் தலமாகிய கடம்பூர் நகரத்தில் உள்ள கரக்கோயிலாகும்.