பாடல் 8:
முந்தி இவ்வுலகம் எல்லாம் படைத்தவன் மாலினோடும்
எம் தனி நாதனே என்று இறைஞ்சி நின்று ஏத்தல் செய்ய
அந்தம் இல் சோதி தன்னை அடி முடி அறியா வண்ணம்
செந்தழல் ஆனார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே
விளக்கம்:
இந்த பாடலில், திருமாலும் பிரமனும் மனம். மெய், மொழிகளால் இறைவனை வணங்கிய தன்மை குறிப்பிடப்பட்டுள்ளது. என் தனி நாதனே என்று நினைத்தது மனத்தின் செயல்; இறைஞ்சி நின்றது உடலின் செயல்; ஏத்தல் செய்தல், வாயின் செயல்.
பொழிப்புரை:
முன்னொரு நாளில், உலகத்தைப் படைத்த பிரமன், திருமாலுடன் சேர்ந்து, தங்களது நாதன் ஒப்பற்ற சிவபெருமான் தான் என்பதை நெஞ்சார நினைந்து, சிவபெருமானின் அருளை வேண்டி வணங்கி, வாயால் அவரது புகழ்களைக் கூறி வாழ்த்தி நின்றபோது, முடிவில்லாத சோதியாக அவர்கள் முன்னர் தோன்றி, அவர்களால் அடிமுடி அறியாத வண்ணம் தீப்பிழம்பாக சிவபெருமான் காட்சி அளித்தார். இவ்வாறு அவர்களுக்கு அருளியவர், சேறைப் பதியில் உள்ள செந்நெறி எனப்படும் கோயிலில் வாழ்கின்ற எம்பெருமான் ஆவார்.