பாடல்: 9
விட்டுருவம் கிளர்கின்ற சோதியானாம்
விண்ணவர்க்கும் அறியாத சூழலானாம்
பட்டுருவ மால் யானைத் தோல் கீண்டானாம்
பலபலவும் பாணி பயின்றான் தானாம்
எட்டுருவ மூர்த்தியாம் எண்தோளானாம்
என் உச்சி மேலானாம் எம்பிரானாம்
கட்டுருவம் கடியானைக் காய்ந்தானாகும்
கண்ணாம் கருகாவூர் எந்தை தானே
விளக்கம்:
உருவம்=நிறம்: சூழல்=நிலை; கட்டுருவம்=இளமையான அழகான உருவம் கொண்ட மன்மதன்
பொழிப்புரை:
கருகாவூர் எந்தையாகிய சிவபெருமான், செந்நிற ஒளி வீசும் சோதியாக உள்ளான்; தேவர்கள் அறியமுடியாத நிலையினான்; தன்னை எதிர்த்து வந்த யானையைத் தனது கை நகத்தால் கீறி அதன் தோலை உரித்து ஆடையாக அணிந்து கொண்டவன்; பல விதமான தாளங்களுக்கு ஏற்ப கூத்தினை ஆடும் திறமை கொண்டவன்; அட்ட மூர்த்தியாக விளங்குபவன்; எட்டு தோள்களைக் கொண்டவன்; அழகிய இளைய வடிவம் கொண்ட மன்மதனை, நெற்றிக் கண்ணால் விழித்து பொசுக்கியவன். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சிவபெருமான், தனது திருவடியினை எனது தலை மேல் வைத்தவன், அவனே எனது தலைவன். அவன் பல அடியார்களுக்கும், கண் போன்று வழிகாட்டியாக உள்ளான்.