பாடல் 8:
தொடரும் தொண்டரைத் துக்கம் தொடர்ந்து வந்து
அடரும் போது அரனாய் அருள் செய்பவர்
கடலின் நஞ்சணி கண்டவர் கடி புனல்
படரும் செஞ்சடைப் பாலைத் துறையரே
விளக்கம்:
அரன்=அழித்தல் தொழிலைச் செய்பவன்:
பொழிப்புரை:
தம்மைத் தொடர்ந்து வணங்கும் அடியார்களைத் துன்பங்கள் தொடரும் போது, அந்த துன்பங்களை அழிக்கும் அரனாக செயல்படுபவர் சிவபெருமான். ஆலகால விடம் துன்பமாக தேவர்களைத் தொடர்ந்த போது, அந்த நஞ்சினைத் தான் உட்கொண்டு, தேவர்களை அந்த துன்பத்திலிருந்து காத்து அருள் புரிந்தவர் சிவபெருமான் ஆவார். அவர் நறுமணம் கமழும் கங்கை நீரினைத் தனது செஞ்சடையில் அடக்கியுள்ளார். அவர் தாம் பாலைத்துறையில் உறையும் பெருமானாவார்.