பாடல் 6
வெம்மை நமன்தமர் மிக்கு விரவி விழுப்பதன் முன்
இம்மை உன் தாள் என் தன் நெஞ்சத்து எழுதி வை ஈங்கு
இகழில்
அம்மை அடியேற்கு அருளுதி என்பது இங்கு யாரறிவார்
செம்மை தரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே
விளக்கம்:
விழுப்பதன் முன்=வீழ்த்துவதன் முன்னர்; இகழில்=அலட்சியம் செய்தல்; செம்மை=வீடுபேறு. விரவுதல்=சேர்ந்து இருத்தல், நிறைந்து இருத்தல்.
பொழிப்புரை:
தீயினைப் போன்று கொடிய இயமனின் தூதுவர்கள் ஒன்று சேர்ந்து என்னை வீழ்த்தி பல கொடுமைகளுக்கு ஆளாக்கும் முன்னர், இந்தப் பிறவியிலேயே உனது திருப்பாதங்களை எனது தலை மீது பதிப்பதன் மூலம், உனது பாதங்களின் நினைவினை உறுதியாக எனது நெஞ்சினில் எழுதி வைப்பாயாக. சத்திமுற்றத்தில் உறையும் வீடுபேறு அருளவல்ல சிவபிரானே, நீ எனக்கு அடுத்த பிறவியில் புரியும் அருட்செயல்கள், இங்குள்ளவர் அறிய முடியாது. எனவே நீ எனது வேண்டுகோளை அலட்சியம் செய்யாது இப்போதே அருள் புரியவேண்டும். .