பாடல் 2:
பிணி நீர சாதல் பிறத்தல் இவை பிரிய பிரியாத பேரின்பத்தோடு
அணி நீர மேலுலகம் எய்தல் உறின் அறிமின் குறைவில்லை ஆனேறு உடை
மணி நீல கண்டம் உடைய பிரான் மலைமகளும் தானும் மகிழ்ந்து வாழும்
துணி நீர்க் கடந்தை தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே
விளக்கம்
உடைய; மேலுலகம்=சிவனுலகம்; துணிநீர்=துள்ளிக் குதித்து ஓடும் நீர்; பிரியாத பேரின்பம்=வரம்பிலா இன்பம் கொடுக்கும் முக்தி உலகத்தின் தன்மையை உணர்த்த பேரின்பம் என்று கூறினார். நிலவுலகத்தில் நாம் அடையும் இன்பம் அளவினில் மிகவும் சிறியது, நிலையற்ற தன்மையால் அழிந்து துன்பமாக மாறக் கூடியது என்பதை உணர்த்தும் பொருட்டு பிரிய என்ற சொல்லினை பயன்படுத்தியுள்ளார். ஆனால் சிவனது உலகத்தில் பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்காக காத்திருக்கும் இன்பமோ, துன்பக் கலப்பில்லாதது, நிலையானது. இந்த வேற்றுமையை உணர்த்தும் பொருட்டு பிரியாத பேரின்பம் என்றும் பிரிய இன்பம் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். பிணிகள் நமது உடலின் வலிமையை குறைத்து நமக்கு துன்பம் அளிப்பதால், நோய்களால் நாம் சலிப்பினை அடைகின்றோம். பிறப்பு இறப்பு மற்றும் இவையிரண்டின் இடைப்பட்ட வாழ்வு அனைத்தும் நாம் பல துன்பங்களை அனுபவிக்க வழி வகுப்பதால், நோய்கள் போன்று சலிப்பினைத் தருவதாக இங்கே கூறப்படுகின்றது. அணி நீர=அழகிய தன்மையை உடைய;
பொழிப்புரை:
நமது உடலினை வருத்தி சலிப்படைய வைக்கும் நோயின் தன்மையை உடைய பிறப்பு இறப்பு மற்றும் இவையிரண்டின் இடைப்பட்ட வாழ்வு ஆகியவற்றை விட்டுப் பிரிந்து, என்றும் அழியாமல் நம்மை விட்டு பிரியாத பேரின்பத்தைத் தருவதும் அழகியதும் ஆகிய சிவலோக வாழ்க்கையினை அடைய விரும்பும் மனிதர்களே, உங்களுக்கு எந்த விதத்திலும் குறை ஏற்படாத வழியினை நான் சொல்லுகின்றேன் நீங்கள் கேட்பீர்களாக; எருதினை தனது வாகனமாக உடையவனும் அழகிய நீலமணி போன்ற கழுத்தினை உடையவனும், எங்களது தலைவனும் ஆகிய இறைவன், மலைமகளுடன் இணைந்து மகிழ்ந்து வாழும் தூங்கானை மாடம் திருக்கோயிலை உடையதும், துள்ளி குதித்து வரும் நீரினை உடைய நிவா நதிக்கரையினில் உள்ளதும் ஆகிய கடந்தை தலம் சென்றடைந்து, ஆங்குள்ள இறைவனை வணங்கி நீங்கள் விரும்பிய பயன் அடைவீர்களாக.