105. ஒடுங்கும் பிணிபிறவி   - பாடல் 3

இளைத்தேன் எம்பெருமான்
105. ஒடுங்கும் பிணிபிறவி   - பாடல் 3

பாடல் 3:

    சாநாளும் வாழ்நாளும் தோற்றம் இவை சலிப்பாய
        வாழ்க்கை ஒழியத் தவம்
    ஆமாறு அறியாது அலமந்து நீர் அயர்ந்தும்
        குறைவில்லை ஆனேறு உடைப்
    பூ மாண் அலங்கல் விலங்கு கொன்றை புனல்
        பொதிந்த புன்சடையினான் உறையும்
    தூ மாண் கடந்தை தடங்கோயில் சேர்
        தூங்கானை மாடம் தொழுமின்களே

விளக்கம்:

தோற்றம்=பிறவி; இறப்பு என்பது அனைவர்க்கும் வருத்தத்தை தருவது; உடலுடன் உயிர் ஒட்டி வாழ்கின்ற நாளில், உயிர் வினைகளை நுகரும் போது உடலும் உள்ளமும் சலிப்பு அடைவதால் சலிப்பாய வாழ்க்கை என்று குறிப்பிடுகின்றார்./ உடலிலிருந்து உயிர் பிரிந்த பின்னரும் உயிர் தொடர்ந்து சலிப்படைகின்றது. வினைகளின் ஒரு பகுதியை கழித்துக் கொள்ளும் பொருட்டு சூக்கும உடல் நரகத்தில் பல துன்பங்களை அடைகின்றது. அவ்வாறு நரகத்தில் பல தண்டனைகள் எதிர்கொண்டு வருந்திய பின்னரும், நமது வினைகளின் தொகுதி மிகவும் அதிகமாக இருப்பதால், எஞ்சி இருக்கும் வினைகளை கழித்துக் கொள்ள மேலும் பல பிறவிகள் எடுக்க நேரிடுகின்றது. எனவே இவ்வாறு தொடர்ந்து வினைகளை கழிக்கும் பாதையில் பயணம் செய்யும் உயிர் சலிப்பு அடைவதை, தடுக்கும் ஒரே வழி இந்த பிறப்பிறப்புச் சுழற்சியிலுருந்து விடுதலை பெறுவது தான். இவ்வாறு உயிர் தொடர்ந்து துன்பங்களை அனுபவித்து வருத்துவதை மணிவாசகர், எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் என்று சிவபுராணத்தில் குறிப்பிடுகின்றார். அலமந்து=வருந்தி; தவம் ஆமாறு=தவம் எவ்வாறு செய்வது; தூமாண்=தூய்மையும் மாட்சிமையும் பொருந்திய; சலிப்பினைத் தரும் வாழ்க்கை என்று முந்திய பாடலில் கூறியதை வலியுறுத்தும் வண்ணம் இந்த பாடலில் சலிப்பாய வாழ்க்கை என்று சம்பந்தர் கூறுகின்றார். விலங்கல்= மாலை; இலங்கு=விளங்கும்; பூமாண்=பூக்களில் சிறந்தது என்ற பெருமையுடன்;

சாநாளும் வாழ்நாளும் சலிப்பினைத் தருவதால் அவற்றைத் தவிர்க்கும் வழியினை சம்பந்தர் இங்கே குறிப்பிடுவது நமக்கு அவர் அருளிய சாய்க்காடு பதிகத்தின் பாடல் ஒன்றினை (2.41.3) நினைவூட்டுகின்றது. நமது வாழ்நாள் எத்தனை, நாம் இறக்கும் நாள் எது என்பதை அறிந்தவர் யாரும் இல்லை. எனவே இப்போதிருந்தே, தினமும், சிவபெருமானை வழிபட மலர்களைத் தலையில் சுமந்தும், அவரது திருநாமத்தை காதுகளால் கேட்டும், அவரது பெருமையை தினமும் நாக்கினால் புகழ்ந்து பாடியும், அவரது நினைவுகளை நமது நெஞ்சத்தில் வைத்தும் நாம் வாழ்ந்தால் நல்வினைகளை அடையமுடியும் என்று இந்த பாடலில் சம்பந்தர் கூறுகின்றார். இந்த பாடலில் மனம், மொழி, மெய் ஆகிய மூன்றினையும் ஈடுபடுத்தி பெருமானை வணங்கி வழிபடும் நிலை உணர்த்தப் படுகின்றது. 

    நீ நாளும் நன்னெஞ்சே நினை கண்டாய் யார் அறிவார்
    சாநாளும் வாழ்நாளும் சாய்க்காட்டு எம் பெருமாற்கே
    பூ நாளும் தலை சுமப்பப் புகழ் நாமம் செவி கேட்ப
    நா நாளும் நவின்று ஏத்தப் பெறலாமே நல்வினையே  
          


பொழிப்புரை: 

சலிப்பினை ஏற்படுத்தும் இறத்தல், வாழ்தல் மீண்டும் பிறந்து தொடர்ந்து வருந்துதல் ஆகிய இந்த வாழ்க்கையினை ஒழித்து விடுதலை பெறுகின்ற நோக்கத்துடன் செய்யப்படும் தவத்தின் தன்மைகளை உணர்ந்து தவம் எவ்வாறு செய்வது என்பதை அறியாமல் திகைக்கும் மனிதர்களே, நீங்கள் தவம் செய்யும் முறையினை அறியாமல் இருப்பதால் உங்களுக்கு இருக்கும் குறையினை நீக்கும் வழியினை நான் சொல்கின்றேன் கேட்பீர்களாக. எருதினை வாகனமாகக் கொண்டவனும், பூக்களில் சிறந்தது என்ற பெருமையினை உடைய கொன்றை மலரினையும் கங்கை நதியும் தாங்கும் செம்பட்டை நிறத்தில் உள்ள சடையினை உடையவனும் ஆகிய பெருமான் உறையும் தூங்கானை மாடம் என்று அழைக்கப்படும் அகன்ற திருக்கோயிலை உடைத்ததும், தூய்மையும் மாட்சிமையும் பொருந்திய கடந்தைத் தலம் சென்று ஆங்குள்ள பெருமானை வணங்கித் தொழுது பயன் அடைவீர்களாக. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com