பாடல் 6:
வீங்கிய தோள்களும் தாள்களுமாய்
நின்று வெற்றரையே
மூங்கைகள் போல் உண்ணும் மூடர் முன்னே
நமக்கு உண்டு கொலோ
தேன் கமழ் சோலைத் தென்னரூர்த்
திருமூலட்டானான் செய்ய
பூங்கழலான் அடித் தொண்டர்க்குத் தொண்டராம்
புண்ணியமே
விளக்கம்:
வெற்றரை=வெற்று+அரை, உடை அணியாத இடுப்பு; வீங்கிய தோள்=பருமனான தோள்கள்; மூங்கை=ஊமைகள்;
பொழிப்புரை:
தேனின் நறுமணம் காற்றினில் கலந்து கமழும் சோலைகள் நிறைந்த தென் திருவாரூர் மூலட்டானத்தில் உறையும் இறைவனது செம்மையான திருப்பாதங்களை வணங்கித் தொழும் அடியார்களுக்கு அடியேனாக இருக்கும் நல்வினைப் பேற்றினை அடியேன், பருமையான தோள்களும் கால்களும் கொண்டவர்களாகவும், ஊமைகள் போன்று யாதும் பேசாமல் உணவு உட்கொள்பவர்களும், உடலில் ஆடைகள் ஏதும் அணியாதவர்கலாகவும், மூர்க்கர்களாகவும் விளங்கிய சமணர்கள் காணும் வகையில் பெறுவேனோ. பெருமானே, நீ தான் அடியேன் அத்தகைய அருள் பெறுமாறு உதவ வேண்டும்.