பாடல் 11
மூடிய சோலை சூழ் முதுகுன்றத்து ஈசனை
நாடிய ஞானசம்பந்தன்
நாடிய ஞானசம்பந்தன செந்தமிழ்
பாடிய அவர் பழி இலரே
விளக்கம்:
மூடிய சோலை=அடர்ந்து காணப்படும் சோலை; சூரியனின் ஒளியும் புகாத வண்ணம் அடர்ந்து காணப்படுவதால், மூடப்பட்டது போன்ற தோற்றத்தை அளிக்கும் சோலைகள்.
பொழிப்புரை:
அடர்ந்து காணப்படும் சோலைகள் நிறைந்த முதுகுன்றம் தலத்தில் உறையும் ஈசனை, நாடிச் சென்று ஞானசம்பந்தனாகிய அடியேன் வணங்குகின்றேன். இவ்வாறு நாடிச் சென்று வணங்கிய ஞானசம்பந்தனின் பாடல்களைப் பாடும் அடியார்களை வீண்பழிகள் அடையாது.
முடிவுரை:
பதிகத்தின் முதல் நான்கு பாடல்களில் முதுகுன்றத்து ஈசனைத் தொழுவதால் நாம் இம்மையில் அடையவிருக்கும் பலன்களை குறிப்பிட்ட ஞானசம்பந்தர், ஒன்பதாவது மற்றும் பத்தாவது பாடல்களில், முதுகுன்றத்து இறைவனை நோக்கி செய்யப்படும் வழிபாடு, மறுமையில் முக்தி நிலை பெற்றுத்தரும் என்று கூறுகின்றார். காசியினைப் போன்று முதுகுன்றமும், அந்த தலத்தில் இறக்கும் உயிர்களுக்கு முக்தி பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை உள்ளது. நிலையற்ற நமது உயிர், இந்த உடலை விட்டு பிரியும் காலம் எதுவென்று நம் எவராலும் அறிய முடியாததால், நாம் இன்றே முதுகுன்றம் சென்று அங்குள்ள குன்றினை வலம் வந்து, இறைவனையும் வணங்கி, அவனது புகழினை குறிப்பிடும் தேவாரப் பதிகங்கள் பாடி, மறுமையில் நிலையான ஆனந்தம் தரும் முக்தி நிலை பெறுவதற்கு முயல்வோமாக.