பாடல் 7:
சாதியார் பளிங்கின்னொடு வெள்ளிய சங்கவார்
குழையாய் திகழப்படும்
வேதியா விகிர்தா விழவார் அணி
தில்லை தன்னுள்
ஆதியாய்க்கு இடம் ஆய சிற்றம்பலம் அங்கையால்
தொழவல்லார் அடியார்களை
வாதியாது அகலும் நலியா மலி தீவினையே
விளக்கம்:
மலி=பெரிய, நிறைந்த; சாதியார்=உயர்ந்த தரமான; வாதியா=துன்புறுத்தாது வார்=தொங்கும்; விகிர்தன்=ஏனையோரிலிருந்து பல விதத்திலும் மாறுபட்டவன்;
பொழிப்புரை:
நல்ல இனத்தைச் சார்ந்து தரமாக உள்ள பளிங்கு கலந்து செய்யப்பட்ட வெண்சங்கு குழை தொங்கும் வண்ணம் காதினில் அணிந்தவனே, புகழுடன் விளங்கும் வேதியனே, விகிர்தனே, திருவிழாக்கள் நிறைந்த தில்லை நகரில் ஆதியாய் உள்ள பெருமானுக்கு இடமாக அமைந்துள்ள திருச்சிற்றம்பலத்தை, தங்களது அழகிய கைகளால் தொழவல்ல அடியார்களை தீவினைகள் வருத்தாது, பெருகி துன்பம் தாராது அவர்களை விட்டு விலகிவிடும்