பாடல் 8:
முடிகள் வணங்கி மூவாதார்கள் முன் செல்ல
வடிகொள் வேய்த்தோள் வானர மங்கையர் பின் செல்லப்
பொடிகள் பூசிப் பாடும் தொண்டர் புடை சூழ
அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்
விளக்கம்:
ஆதிரைத் திருநாளில் வலம் வரும் இறைவனின் பின்னே செல்பவர் எவரெவர் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். வானர மங்கையர் என்பதை வான் அர மங்கையர் என்று பிரித்து, வானுலகத்தில் வாழும், சிவபிரானின் அடியார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். அரனாகிய சிவபிரானைப் புகழ்ந்து பாடும் மங்கையர்கள் அர மங்கையர்கள் என்று இங்கே குறிப்பிடப்படுகின்றனர். மூவாதார்=மூப்பு அடையாத நிலையை உடைய தேவர்கள்
பொழிப்புரை:
சிவபெருமானின் திருவீதி உலா முன்னர், தங்களது தலைகளைத் தாழ்த்தி இறைவனை வணங்கும் தேவர்கள் முன்னே செல்ல, சிவபெருமானின் உலாவின் பின்னர், வடிவாக அமைந்த மூங்கில் போன்று அழகான தோள்களைக் கொண்ட தேவமங்கையர்கள் செல்ல, திருநீற்றினைப் பூசிய அடியார்கள் நாற்புறமும் இறைவனைச் சூழ்ந்து செல்ல மிகவும் அழகிய காட்சியாக உள்ள ஆரூர் திருவிழாக் கோலம் காண்போரின் உள்ளத்தில் நிலைத்து நிற்கும் தன்மை உடையது,