பாடல் 5:
பூதங்கள் பல உடைப் புனிதர் புண்ணியர்
ஏதங்கள் பல இடர் தீர்க்கும் எம்மிறை
வேதம் கண் முதல்வர் வெண்காடு மேவிய
பாதங்கள் தொழ நின்ற பரமர் அல்லரே
விளக்கம்:
ஏதம்=குற்றம்; பரம்=மேலான பொருள்; பரமர்=அனைவர்க்கும் மேலான இறைவர்; வேதம் கண்=வேதங்களில்
பொழிப்புரை:
பூத கணங்கள் பல உடையவரும், தூய்மையானவரும், புண்ணியமே வடிவமாக இருப்பவரும் ஆகிய இறைவர் தம்மை வழிபடும் அடியார்களின் குற்றங்களை நீக்கி அவர்களது துன்பங்களையும் தீர்த்து அருளும் இயல்பினர் ஆவார், வேதங்களில் பல இடங்களிலும் முதல்வர் என்று கூறப்படும் சிவபெருமான், திருவெண்காடு தலத்தில் வீற்றிருக்கும் இறைவர், தனது திருப்பாதங்கள் அனைவராலும் தொழப்படும் வண்ணம் நிலையில் உள்ள, மேலான தெய்வமாக
விளங்குகின்றார் அல்லவா.