எழுத்தாளர் மாலனுக்கு "ஆய்வுக் கொடையை' ("ஃபெலோஷிப்') சிங்கப்பூர் தேசிய நூலகம் வழங்கியுள்ளது.
"லீ காங் சியான் ஆய்வறிஞர்' என்ற சிறப்புக் கௌரவத்தை அவருக்கு இந்த ஆண்டு சிங்கப்பூர் தேசிய நூலகம் வழங்கியுள்ளது. சிங்கப்பூரில் 6 மாதம் தங்கியிருந்து சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் குறித்த ஆய்வு ஒன்றினை அவர் மேற்கொள்வதற்கு இந்தக் கௌரவம் வாய்ப்பளிக்கும். மேலும், சிங்கப்பூரின் சமூக வளர்ச்சி, சிங்கப்பூர் தமிழ் எழுத்துக்களில் எப்படி எதிரொலிக்கிறது என்ற ஆய்வினையும் அவர் மேற்கொள்ள உள்ளார்.
2 லட்சம் நூல்களுடன்...: 16 மாடி கட்டடத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்கள், 700-க்கும் மேற்பட்ட இதழ்கள், குறுந்தகடுகள், ஒலிப் புத்தகங்களுடன் உலகின் சிறந்த நூலகங்களில் ஒன்றாக சிங்கப்பூர் தேசிய நூலகம் விளங்குகிறது. இந்த நூலகத்தை 1960-ஆம் ஆண்டு கொடையாளரும் சீன வணிகருமான "லீ காங் சியான்' நிறுவினார். அவரது பெயரில் "லீ காங் சியான் ஆய்வறிஞர்' என்ற சிறப்பு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.