17 வயதுக்கு உள்பட்டோருக்கான ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி நடத்துவதற்கான இடங்களில் ஒன்றாக, இந்தியாவிலேயே முதன்முறையாக கேரள மாநிலத்தின் கொச்சி நகரம் தேர்வாகியுள்ளது.
ஃபிஃபா அமைப்பைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் என 23 பேர் அடங்கிய உயர் மட்டக் குழு கொச்சியில் உள்ள ஜவாஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தை ஆய்வு செய்த பிறகு, அங்கு போட்டியை நடத்துவதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.
இதுகுறித்து, பிராந்திய ஒருங்கிணைப்புக் குழு இயக்குநர் ஜேவியர் செப்பி கூறியதாவது:
கேரள அரசு, கேரள கால்பந்து விளையாட்டுச் சங்கம் மற்றும் இதர அமைப்புகளின் செயல்பாடு, விளையாட்டரங்கத்தில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வு ஆகியவற்றின் அடிப்படையில் கலந்தாலோசிக்கப்பட்டது.
இதன்படி, கொச்சி ஜவாஹர்லால் நேரு சர்வதேச விளையாட்டு அரங்கத்தை, 17 வயதுக்கு உள்பட்டோருக்கான ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்தும் இடங்களில் ஒன்றாக தேர்வு செய்துள்ளோம்.
குறுகிய காலத்தில் இன்னும் சில பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டியுள்ளது. அதையும் தீவிரமாக கண்காணிப்போம் என்று ஜேவியர் செப்பி கூறினார்.