"தோனி ஒரு அனுபவமிக்க வீரர். பேட்டிங் ஆர்டரில் அவர் குறிப்பிட்டு இந்த இடத்தில் தான் களமிறங்க வேண்டும் என்ற தேவையில்லை' என்று இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை கூறியதாவது:
பேட்டிங் ஆர்டரில் எந்த இடத்தில் களமிறங்க வேண்டும் என்பது ஆட்டத்தின் சூழ்நிலையைப் பொறுத்தது. ரன்களை சேஸ் செய்யும்போது அதிக அனுபவம் தேவை. அந்த வகையில், தோனிக்கு போதிய அனுபவம் உள்ளது. ஒரு பேட்ஸ்மேனாக தனக்கு போதிய திறன்கள் உள்ளது என்பதை பல ஆண்டுகளாக அவர் நிரூபித்துள்ளார்.
பல்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பேட்டிங் ஆர்டர் மாற்றப்படுவதை நீங்கள் காண முடியும். மணீஷ் பாண்டேவுக்கு இருக்கும் உள்நாட்டு கிரிக்கெட் அனுபவங்கள் காரணமாக, அவரை 4-ஆவதாக களமிறக்கலாம். அவர் தர்மசாலாவில் நல்ல முறையில் தொடங்கினார்.
அதேவேளையில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறதா, அல்லது இரண்டாவதாக களமிறங்குகிறதா போன்ற காரணங்கள் அடிப்படையில் வேறு பேட்ஸ்மேனுக்கும் வாய்ப்பு அளிக்கப்படலாம்.
டாப் ஆர்டரில் விளையாட ரஹானே சரியான வீரராக இருக்கிறார். எனினும், இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்குப் பிறகே எதையும் தெளிவாகக் கூற முடியும். ஆனால், நடப்பு ஒருநாள் தொடரில் ரஹானே தொடக்க வீரராகவே களமிறங்குவார் என்று அனில் கும்ப்ளே கூறினார்.