விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், குரோஷியாவின் மரின் சிலிச் மோதினர்.
இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஃபெடரர் 6-3, 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் மரின் சிலிச்சை வீழ்த்தி விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.
இதன்மூலம் அதிகமுறை (8 முறை) விம்பிள்டன் பட்டம் வென்றவர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்.
இதுதவிர 'ஓபன் எரா'வில் விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்ற மூத்த வீரர் என்ற பெருமையும் 35 வயதான ஃபெடரர் வசமானது.
முன்னதாக, இந்தச் சாதனை அமெரிக்காவின் ஆர்தர் ஆஷ் வசம் இருந்தது. 1975-ல் விம்பிள்டனில் பட்டம் வென்றபோது அவருக்கு வயது 32.
விம்பிள்டனில் 11-ஆவது முறையாக இறுதிச் சுற்றில் களமிறங்கிய ஃபெடரர், 19-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு விம்பிள்டனில் பட்டம் வென்றார்.
இந்த சீசன் முழுவதும் புல்தரை ஆடுகளங்களில் சிறப்பாக ஆடி வந்திருக்கிறார் ஃபெடரர். நடப்பு விம்பிள்டனில் ஒரு செட்டைக்கூட இழக்காமல் கோப்பையை வென்று அசத்தினார்.