ஜகார்த்தா ஆசியப் போட்டியில் குத்துச்சண்டை ஆடவர் பிரிவில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் அரையிறுதிப் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைக்கவுள்ளது.
ஆடவர் மிடில் வெயிட் 75 கிலோ பிரிவில் இந்திய வீரர் விகாஸ் கிருஷண் சீனாவின் எர்பிகேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் பதக்கவாய்ப்பையும் அவர் உறுதி செய்தார். எனினும் அந்தப் போட்டியின்போது விகாஸ் கிருஷ்ணனின் இடக்கண்ணில் காயம் ஏற்பட்டது.
அரையிறுதியில் கஸகஸ்தானைச் சேர்ந்த அபில்கானுடன் மோதவேண்டியிருந்தது. ஆனால் கண்ணில் ஏற்பட்ட காயம் குணமாகாததால் போட்டியிலிருந்து விகாஸ் கிருஷ்ணன் விலகினார். இதையடுத்து அபில்கான் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். விகாஸ் கிருஷ்ணனுக்கு வெண்கலம் கிடைக்கவுள்ளது.
இதற்கு முன்பு 2010-ல் தங்கமும் கடந்த ஆசியப் போட்டியில் வெண்கலமும் வென்ற விகாஸ் கிருஷ்ணன் தற்போது மூன்றாவது பதக்கத்தைப் பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.