கால்பந்து உலகக் கோப்பை: நேற்று என்ன நடந்தது?

நேற்று நடைபெற்ற ஆட்டங்களின் விவரங்கள்:
கால்பந்து உலகக் கோப்பை: நேற்று என்ன நடந்தது?

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி ரஷியாவில் ஜூன் 14 முதல் தொடங்கியுள்ளன. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் நடைபெறும் 64 ஆட்டங்களில் 32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன.

நேற்று நடைபெற்ற ஆட்டங்களின் விவரங்கள்:

ஜப்பான் 2 கொலம்பியா 1

குரூப் ஹெச் பிரிவில் உள்ள ஜப்பான்-கொலம்பியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் செவ்வாய்க்கிழமை மாலை சரன்ஸ்க் நகரில் நடைபெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஆட்டத்தில் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர போராடினர். ஆட்டம் தொடங்கி 4-வது நிமிடத்தில் கோல் பகுதியில் கொலம்பிய வீரர் கார்லோஸ் சாஞ்செஸ் கையில் பட்டு பந்து பவுல் ஆனது. இதையடுத்து கார்லோஸுக்கு நடுவர் சிகப்பு அட்டை காண்பித்ததால் வெளியேற்றப்பட்டார். பின்னர் 10 வீரர்களுடன் மட்டுமே கொலம்பியா ஆட முடிந்தது. இதையடுத்து ஜப்பான் அணிக்கு தரப்பட்ட பெனால்டி கிக் வாய்ப்பை பயன்படுத்தி ஷின்ஜி ககாவா அற்புதமாக கோலடித்தார். இதன் மூலம் ஜப்பான் 1-0 என முன்னிலை பெற்றது.

இதற்கிடையே 39-வது நிமிடத்தில் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை பயன்படுத்தி ஜூவான் குயிண்டெரோ அற்புதமாக கோலடித்தார். இதனால் முதல் பாதி ஆட்ட முடிவின் போது 1-1 என சமநிலையில் இருந்தது. இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியவுடன் இரு அணி வீரர்களும் மீண்டும் முன்னிலை பெற தீவிரமாக போராடினர்.73-வது நிமிடத்தில் கிடைத்த கார்னர் மூலம் கீய்ஸுகி ஹோண்டா அடித்த பந்தை யுயா ஓஸாகா தலையால் முட்டி கோலாக்கினார். இதன் மூலம் ஜப்பான் 2-1 என முன்னிலை பெற்றது. ஆட்டம் முடியும் வரை கோலடிக்க கொலம்பிய வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. 

இறுதியில் ஜப்பான் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. கொலம்பிய வீரர் கார்லோஸ் சாஞ்செஸ் பெற்ற சிவப்பு அட்டை அந்த அணி தோல்விக்கு காரணமாகி விட்டது.

செனகல் 2 போலந்து 1

குரூப் ஹெச் பிரிவில் இடம் பெற்றுள்ள போலந்து-செனகல் அணிகள் இடையிலான ஆட்டம் மாஸ்கோ ஸ்பார்டக் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. 

38-வது நிமிடத்தில் செனகல் வீரர் மேன் பந்தை கடத்தி சக வீரர் இட்ரிஸா குயேவுக்கு அனுப்பினார். அதைத் தடுத்து போலந்து வீரர் தியாகோ சியோனக் வெளியில் அடிக்க முயன்ற போது, கோல்கம்பத்துக்குள் சென்று சேம்சைட் கோலானது. முதல் பாதி ஆட்ட நிறைவில் செனகல் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.

60-வது நிமிடத்தில் போலந்து வீரர் கியோசோவியக் வலுவின்றி தனது அணி கோல்கீப்பரிடம் பந்தை அடித்தார். அப்போது செனகல் முன்கள வீரர்கள் மியாங் நியாங் அந்த வாய்ப்பை பயன்படுத்தி அற்புதமாக கோலடித்தார். இதனால் 2-0 என செனகல் முன்னிலை பெற்றது. ஆட்டம் முடிய சிறிது நேரம் இருக்கையில் 86-ஆவது நிமிடத்தில் போலந்து வீரர் கிரகோர்ஸ் கியோசோவியக் ப்ரீ கிக் வாய்ப்பு மூலம் ஓரே கோலை அடித்தார். இறுதியில் செனகல் அணி 2-1 என போலந்தை வீழ்த்தி, உலகக் கோப்பையில் ஆப்ரிக்க அணியின் முதல் வெற்றியை பதிவு செய்தது.

ரஷியா 3 எகிப்து 1

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ரஷிய அணி 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் எகிப்தை எதிர்கொண்டது. 

இரண்டாம் பாதியில் 15 நிமிடங்களுக்குள் 3 கோல்களை அடித்து முன்னிலை பெற்றது ரஷிய அணி. 47வது நிமிடத்தில் எகிப்தின் அஹமது ஃபதி எதிர்பாராதவிதமாக சேம்சைட் கோல் அடித்து ரஷிய அணியின் முதல் கோலுக்குக் காரணமாக இருந்தார். 59 மற்றும் 62-வது நிமிடங்களில் ரஷிய வீரர்கள் கோலடித்து வெற்றி வாய்ப்பை உருவாக்கினார்கள். இதன்பின்னர் எகிப்தின் முகமது சாலா பெனால்டி மூலமாக ஒரு கோல் அடித்தாலும் அதனால் எகிப்தின் தோல்வியைத் தவிர்க்கமுடியவில்லை. ஆடிய இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியைத் தழுவியுள்ளதால் போட்டியிலிருந்து வெளியேறுகிறது எகிப்து அணி. ரஷிய அணி இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளதால் காலிறுதிக்குத் தகுதி பெறும் நிலைமையில் உள்ளது. சவுதி அரேபியாவை உருகுவே தோற்கடித்துவிட்டால் ஓர் ஆட்டம் மீதமுள்ள நிலையில் ரஷியாவும் உருகுவேவும் காலிறுதிக்குத் தகுதிபெற்றுவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com