குடிபோதையால் மாம்பலம் ரயில்நிலையம் அருகில் கார்த்திக் (24), சஷாங் (20), மனோஜ் (25) ஆகிய 3 இளைஞர்கள் ரயில் மோதி உயிரிழந்தனர்.
மாம்பலம் - கோடம்பாக்கம் ரயில் நிலையங்களின் இடையில் இந்த 3 இளைஞர்களும் தண்டவாளத்தின் அருகில் அமர்ந்து மது அருத்தியதாக ரயில்வே காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவர்களுடன் இருந்த கார்த்திக் என்பவரின் சகோதரரிடம் ரயில்வே காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இருப்பினும் குடிபோதையில் இருந்த அந்த 3 பேரும் பாதுகாப்பு மதில் சுவரைத் தாண்டி தண்டவாளத்தை கடக்க முயன்றபோது இச்சம்பவம் நடந்ததாக ரயில்வே காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. காவல்துறை மற்றும் கார்த்திக் சகோதரர் ஆகியோர் தொடர்ந்து எச்சரித்தும் குடிபோதையில் ரயில் வருவது தெரியாமல் அதில் சிக்கி உயிரிழந்தனர்.
சஷாங் மற்றும் மனோஜ் ஆகியோர் தனியார் கல்லூரியில் பொறியியல் படித்து வருகின்றனர். 10-ம் வகுப்பு கூட முடிக்காத கார்த்திக் திருமணமாகி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10:35 மணியளவில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த மின்சார ரயில் மோதியதில் சஷாங், மனோஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார்த்திக் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தான்.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை விசாரணை மேற்கொண்டது. 3 பேரின் உடலும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.