கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு செல்ஃபி புகைப்படத்தை தற்போது வெளியிட்டார். அந்தப் புகைப்படத்தில் வினோத் காம்ப்ளி இடம்பிடித்துள்ளார்.
இந்தப் புகைப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அஜித் அகார்கர் உட்பட தனது உயிர் நண்பர்களுடனான செல்ஃபியை பதிவிட்டுள்ளார்.
சிறு வயது முதலே நண்பர்களான சச்சின் டெண்டுல்கரும், வினோத் காம்ப்ளியும் ஒரே பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். மேலும், உள்ளூர் போட்டிகளில் இருந்து இந்திய அணி வரை ஒன்றாக கிரிக்கெட் விளையாடியவர்கள்.
குறிப்பாக 1988-ம் ஆண்டு நடந்த பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது சச்சின்-காம்ப்ளி ஜோடி 664 ரன்கள் குவித்து சாதனைப் புரிந்தது. அன்று முதல் இவர்களின் கிரிக்கெட் பயணம் வெற்றிகரமாகவே அமைந்தது.
இந்நிலையில், 1996-ம் ஆண்டு நடந்த கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டித் தொடருக்குப் பின்னர் இருவரின் நட்பில் விரிசல் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் சரியாக விளையாட காரணத்தால் வினோத் காம்ப்ளி இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
அத்துடன் இந்திய அணியில் மீண்டும் இடம்பெறாத காம்ப்ளி, கடந்த 8 வருடங்களுக்கு முன்பு நடந்த தொலைக்காட்சிப் பேட்டியின் போது, சச்சின் தன்னை இக்கட்டான தருணங்களில் இருந்து காக்கத் தவறி விட்டதாக தெரிவித்தார்.
ஆனால், இவர்கள் இருவரது நட்பு குறித்து சச்சின் டெண்டுல்கர் கருத்து எதுவும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வந்தார்.
இது இவர்கள் இருவருக்கும் இடையிலான இடைவெளியை பெரிதாக்கியது. இந்நிலையில், 2 வாரங்களுக்கு முன்னர் மும்பையில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவின்போது இருவரும் மீண்டும் சந்தித்து தங்கள் நட்பை உறுதிபடுத்தினர்.
அப்போது, ''சச்சின் அன்றில் இருந்து இன்று வரை மாறவே இல்லை. நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் சச்சின்'' என்று காம்ப்ளி அந்த சந்திப்பின் புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.