புணே: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சின் ஷேன் வாட்சன் அடித்த அபார சதத்தின் காரணமாக ராஜஸ்தான் அணிக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 17-வது ஆட்டம் புணேவில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரகானே பந்து வீச்சினைத் தேர்வு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா, கரண் சர்மா ஆகியோரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கிளாசன், ஸ்டூவர்ட் பின்னி ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு ஆகியோர் சென்னைஅணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஸ்டூவர்ட் பின்னி வீசிய முதல் ஓவரிலேயே வாட்சன் அதிரடியைத் துவக்கினார். ராஜஸ்தான் பந்து வீச்சாளர்கள் அனைவரையும் சிதறடித்த வாட்சன் அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் சதமடித்தார். அமபதி ராயுடு 12 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அடுத்து களமிறங்கிய ரெய்னா 29 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார். இதன் பின்னர் யாரும் சிறப்பாக ஆடவில்லை.
இருந்த போதிலும் இறுதி கட்டத்தில் களமிறங்கிய பிராவோ அதிரடியாக விளையாடினார். ஆட்டத்தின் கடைசி ஓவரின் 5-வது பந்தில் 106 ரன்கள் எடுத்த நிலையில் வாட்சன் ஆட்டமிழந்தார். இறுதியாக சென்னை அணி 20 ஓவர்களில் 204 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் தரப்பில் ஸ்ரேயாஸ் கோபால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தற்பொழுது 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் காண உள்ளது.