மருத்துவமனையில் இருந்து 2 நாள்களில் திமுக தலைவர் கருணாநிதி வீடு திரும்புவார் என்று மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி கூறினார்.
ஊட்டச்சத்து, நீர்ச்சத்து குறைபாட்டின் காரணமாக, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையின் 4-ஆவது மாடியில் உள்ள சிறப்பு வார்டில் கருணாநிதிக்கு மருத்துவக் குழுவினர் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். ராஜாத்தி அம்மாள், மகள்கள் செல்வி, கனிமொழி ஆகியோர் அருகில் இருந்து கருணாநிதியைக் கவனித்து வருகின்றனர். இந்த நிலையில் கனிமொழி செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறுகையில், "கருணாநிதி நலமுடன் உள்ளார். 2 அல்லது 3 நாள்களில் அவர் வீடு திரும்புவார்' என்றார்.
இதையடுத்து, மருத்துவமனையில் கருணாநிதியைச் சந்தித்த துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியது: கருணாநிதி நலமுடன் உள்ளார். உணவு சாப்பிடுகிறார். மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்புவது தொடர்பாக மருத்துவர்கள் முடிவு செய்வர். ஓய்வுக்காக கருணாநிதி பெங்களூரு செல்லவில்லை என்றார்.