வங்கக்கடலில் புதிய மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான நடா புயல் காரணமாக தமிழகத்தில் பலத்த மழை பெய்தது.
இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கம், விருதுநகர் ஆகிய இடங்களில் 80 மி.மீ., மதுரை விமான நிலையம், சென்னை, சிவகாசி சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருத்தணி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டி, திருமங்கலம் ஆகிய இடங்களில் 70 மி.மீ. மழையும் பதவாகியுள்ளது.
மேலும் வேலூர், திருவள்ளூர், ராமநாதபுரம், திருவண்ணாமலை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது.
புதிய மேலடுக்கு சுழற்சி: இந்நிலையில் வங்கக்கடலில் மீண்டும் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஸ்டெல்லா செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது: அந்தமான் அருகே தென்மேற்கு வங்கக் கடலில் புதியதாக மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இந்த மேலடுக்கு சுழற்சியானது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி, மேலும் வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். இதன் காரணமாக தமிழகம், புதுவையில் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்வதற்கும் வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றார் அவர்.