தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் சோ. ராமசாமி ஆய்வு இருக்கை விரைவில் அமைக்கப்படும் என, அந்தப் பல்கலைக்கழகத்தின் முதன்மையர் (திட்டம் மற்றும் மேம்பாடு) எஸ். வைத்தியசுப்பிரமணியம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
சோ. ராமசாமியின் இறப்பால் சிறந்த அறிவாற்றலுடனும், ஒருமைப்பாடுடனும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய தேசியவாத பல்துறை வித்தகரை நம்நாடு இழந்துள்ளது. சோவின் அதிர்ச்சி மரணம், அவர் மீது பற்றுகொண்ட பல்வேறு தரப்பைச் சேர்ந்த லட்சக்கணக்கானோருக்கு அவர் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப முடியாத அளவுக்கு மிகப் பெரிய பேரிழப்பு.
பொதுமக்களின் நியாயமான காரணங்களுக்குப் பன்முகத்தன்மையுடன் அர்ப்பணித்துக் கொண்ட அவருடைய ஆன்மாவுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்துகின்றனர். பொதுக் கொள்கைக்கான சோ. ராமசாமி ஆய்வு இருக்கையை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உருவாக்கும் என அறிவிக்கப்படுகிறது. இதன் மூலம், இந்தியாவின் பன்முகத்தன்மை வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான கொள்கைகள் உருவாக்கப்படும்.