சதுப்பு நிலங்கள் தொடர்பான எந்தவித ஆவணத்தையும் தனியாகவோ அல்லது கூட்டாகவோ அல்லது வேறு எந்தவித சொத்துகளுடனோ பத்திரப்பதிவு செய்யக் கூடாது என, மாநிலம் முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்புமாறு சென்னை மண்டல பத்திரப்பதிவு ஐஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள 66.70 ஏக்கர் பரப்பளவை மோசடி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்து ரூ.66 கோடிக்கு விற்பனை செய்த வழக்கில், லட்சுமணன், அழகிரி ஆகிய இருவரும் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், இருவருக்கும் நிபந்தனையின்பேரில் முன் ஜாமீன் வழங்கி செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவு விவரம்:-
சதுப்பு நிலங்களை பாதுகாப்பது தொடர்பாக, கடந்த 2015-இல் உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கை பொருத்தவரை, சதுப்பு நிலங்கள் மோசடியாக பெயர் மாற்றம் செய்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆகையால், இந்த வழக்கில் ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை, வணிகவரி, பதிவுத்துறை செயலாளர் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளின் அதிகாரிகளை எதிர் மனுதாரராக இணைக்கிறேன். மாநிலம் முழுவதும், கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் பத்திரப் பதிவு செய்யப்பட்ட சதுப்பு நிலங்கள் பற்றிய விவரங்கள், ஆவணங்களை பத்திரப் பதிவு ஐஜி 12 வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
சைதாப்பேட்டை, தென் சென்னை பதிவு அலுவலக இணைப் பதிவாளர், சதுப்பு நிலங்கள் தொடர்பான எந்தவொரு ஆவணத்தையும் பதிவு செய்யக் கூடாது. அதேபோன்று, சதுப்பு நிலங்களில், கட்டுமானம் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும். அது குறித்து, பத்திரிகையில் விளம்பரங்களை அரசு வெளியிட வேண்டும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பொருத்தவரை, மாநிலத்தில் வேறு எங்கும் எந்தவித பத்திரப் பதிவும் செய்ய கூடாது என்று, அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு சுற்றறிக்கையை பதிவு துறை ஐஜி அனுப்ப வேண்டும்.
மேலும் கடந்த 1990 ஆண்டு முதல் பத்திரப் பதிவு அலுவலகங்கள் பதிவு செய்த சதுப்பு நிலங்களின் ஆவணங்களை நவம்பர் 28-இல் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 28 ஆம் தேதிக்கு நீதிபதி என்.கிருபாகரன் ஒத்திவைத்தார்.