புற்றுநோய் முற்றியவர்களுக்கான இலவச தங்கும் மையம், வலி நிவாரண சிகிச்சை மையம் ஸ்ரீபெரும்புதூரில் 6 மாதங்களில் தொடங்கப்பட உள்ளது.
இதுகுறித்து அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் மருத்துவர்கள் கூறியது:-
அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பிரிவாக வலிநிவாரண மையம் செயல்பட்டு வருகிறது. மருத்துவமனையில் இருந்து 20 கி.மீ. சுற்றளவு உள்ள பகுதிகளுக்கு மருத்துவர்கள் நாள்தோறும் சென்று, புற்றுநோய் முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கு வலி நிவாரண சிகிச்சையை அளித்து வருகிறார்கள்.
இதன் அடுத்தகட்ட முயற்சியாக நோய் முற்றிய புற்றுநோயாளிகளுக்கு இலவச தங்கும் மையம், வலி நிவாரண மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு நிதியுதவி அளித்தது சிங்வி அறக்கட்டளையாகும்.
நோய் முற்றிய நோயாளிகளுக்கு வலி நிவாரணத்தையும், இறுதி நாள்களில் முறையான கவனிப்பை அளிப்பதற்காகவும் செயல்படும் இந்த மையத்தில் சுமார் 80 படுக்கைகள் உள்ளன.
இதுதவிர, கட்டணத்துடன் கூடிய சிறப்பு வார்டுகளும் அமைக்கப்படும். கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இன்னும் 6 மாதங்களில் மையம் செயல்படத் தொடங்கும் என்றனர்.