டெல்லி: காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதி மன்றம் கூறியபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் இன்று சந்தித்து பேசினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் மத்திய அரசு எடுத்த நிலைப்பாடு தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பாக பிரதமர் மோடி எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காக்கிறார். யாரையும் அவர் சந்திக்கவும் இல்லை. இந்த நிலையில்தான் காவிரி விவகாரம் தொடர்பாக இரு மாநில தலைவர்களும், பிரமுகர்களும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து வருகிறார்கள்.
அந்த வகையில் மக்கள் நலக்கூட்டணியை சேர்ந்த வைகோ, திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் குடியரசு தலைவரை இன்று நேரில் சந்தித்து மனு அளிக்க தில்லி சென்றனர். முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, காவிரி பிரச்சனையில் மத்திய அரசு, தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. குடியரசுத்தலைவரை சந்தித்தால் நியாயம் கிடைக்கும் என்பதற்காக அவரை மட்டும் சந்திக்க இருக்கிறோம். பிரதமரை சந்திக்கவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் பிரதமர் மோடி மறைமுகமாக கர்நாடக அரசுக்கு சாதகமாக செயல்படுகிறார். கர்நாடக அரசு சட்ட விரோதமாக அணை கட்டுவதற்கு மத்திய அரசு துணை போகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் தமிழகத்துக்கு துரோகம் செய்கிறது என்றும் வைகோ குற்றம் சாட்டினார்.
பின்னர் இதனைத் தொடர்ந்து பிரணாப் முகர்ஜியை சந்தித்து மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூட்டாக அவர்கள் பேசினர். அப்போது தெரிவிக்கப்பட்டதாவது:
காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினையில் குடியரசுத்தலைவர் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தபட்டது. கர்நாடகா நீர் தராத காரணத்தால் விவசாயிகளுக்கு 8 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எங்களது கோரிக்கையை பரிசீலிப்பதாக குடியரசுத்தலைவர் தெரிவித்தார்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.